பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!!

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.

கடந்த ஆண்டு 2000க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் மனிதம் போற்றும் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *